லேசான அறிகுறியுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளை குணப்படுத்தும் ‘பேவிபிராவிர்’ மாத்திரையை 39 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது ஜென்பர்க் நிறுவனம்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிற நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிற மருந்துகள் சோதனை ரீதியாக பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஜப்பானில் இன்புளூவென்சாவுக்கு வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரைகள் தரப்படுகின்றன. அந்த மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கும் சோதனை முறையில் டாக்டர்கள் தருகின்றனர்.
இந்த மாத்திரைகள் எந்தளவுக்கு பலன் அளிக்கின்றன என்பது தொடர்பாக இந்தியாவில் 7 முக்கிய இடங்களில் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையை, அவற்றை தயாரித்து சந்தையிடுகிற மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற கிளென்மார்க் நிறுவனத்தார் நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்த மாத்திரைகள் லேசான பாதிப்பு முதல் மிதமான பாதிப்பு வரை உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிப்பதாக தெரிய வந்திருக்கிறது என அந்த நிறுவனத்தார் கூறுகின்றனர்.
150 நோயாளிகளுக்கு தந்து இந்த மாத்திரைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ பரிசோதனையின்போது, வழக்கமான ஆதரவு பராமரிப்புடன் 14 நாட்கள் வரையில் பேவிபிராவிர் மாத்திரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றாம் கட்ட சோதனையில் முதன்மை செயல்திறன் முடிவு, மேம்பாடுகளை காட்டி இருக்கிறது.
மேலும் இந்த மாத்திரைகள் எந்தவொரு மோசமான பாதகமான விளைவுகளையோ, மரணத்தையோ ஏற்படுத்தவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று ‘பேவிபிராவிர்’ மாத்திரை ‘பேவிவென்ட்’ பிராண்ட் பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த மாத்திரையின் விலை 39 ரூபாய் என்ற ஜென்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை பிரின்டன் நிறுவனம் இதே மாத்திரையை ‘பேவின்டன்’பிராண்ட் பெயரில் அதிகபட்சமாக 59 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
கிளென்மார்க் ‘பேபிஃப்ளூ’ என்ற பிராண்ட் பெயரில் ஒரு மாத்திரையை 75 ரூபாய்க்கு விற்று வருகிறது.
Related Tags :
Source: Maalaimalar