Press "Enter" to skip to content

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: கவர்னரின் 6 கேள்விகளால் மீண்டும் அசோக் கெலாட்டிற்கு பின்னடைவு

ராஜஸ்தான் சட்டசபையை கூட்டுவதற்கான நோக்கத்தை தெரிவிக்கவில்லை, கேபினட் ஒப்புதல் அளிக்கவில்லை என கவர்னர் கூறியதால் அசோக் கெலாட்டிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதுடன், சபாநாயகர் பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுக்கு கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடினார். சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. இது அசோக் கெலாட்டிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

நேற்று இரவு கவர்னரை சந்தித்து சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தினார். ஆனால் என்ன நோக்கத்திற்காக சட்டசபையை கூட்ட சொல்கிறீர்கள். சட்டசபையை கூட்ட வேண்டுமென்றால் 21 நாட்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். கேபினட் கூட்டத்தில் சட்டசபையை கூட்டுவதற்கான நாள் குறிப்பிடப்படவில்லை. ஒப்புதலும் இல்லை என்பது உள்பட 6 கேள்விகளை எழுப்பிய கவர்னர், சட்டசபையை கூட்ட உத்தரவாதம் கொடுக்கவில்லை.

இதனால் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் கவர்னர் பேச்சுவார்த்தை நடத்த தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். அப்போது அசோக் கெலாட் நிலைமை எடுத்துக் கூறினார். அதன்பின் ‘‘கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்’’ என்று தெரிவித்தார்.

உடனடியாக கவர்னர் எழுப்பிய கேள்விகள் குறித்து ஆராய மீண்டும் மந்திரி சபையை கூட்டினார் அசோக் கெலாட். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை நோக்கமாக கொண்டு சட்டசபையை கூட்ட வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று காலை அசோக் கெலாட் மீண்டும் கவர்னரை சந்திக்க வாய்ப்புள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »