சென்னையில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருவதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை
கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பின் முதலமைச்சர் பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அதில் அவர் பேசியதாவது:-
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக மாநிலத்தில் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது.
அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் கொரோனா இறப்பு சதவீதமும் குறைந்திருக்கிறது.
சென்னையில் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் தான் செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் முகாம்களால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 25,532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
70 நடமாடும் மருத்துவமனையின் மூலம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப்பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும்.
சென்னையில் 50 சதவிகித பணியாளர்களை வைத்து தொழிற்சாலைகளை இயக்கலாம்.
வெளிமாநிலத்தொழிலாளர்களை வைத்து தொழில் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிதல் , சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அரசு அறிவித்த வழிமுறைகளைப் மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்
அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும்.
Related Tags :
Source: Maalaimalar