ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பயிற்சி மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் இம்மாத தொடக்கத்திலேயே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:
இந்தியாவில் மார்ச் – ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், இந்தியாவில் தடைபட்ட போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டது.
இதற்கான அனுமதி கிடைத்ததையடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நடத்துவதற்கான முன்னெற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக போட்டியில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் சிலர் தங்கள் வீடுகளிலேயே பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒரு அணியாக இதுவரை எந்த அணியும் பயிற்சியை தொடங்கவில்லை.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் இணைந்து பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி நடைபெறும் நாடான ஐக்கிய அரபு அமீரகத்திலேயே சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
இதற்காக அணி வீரர்கள் அனைவரும் இம்மாத தொடக்கத்திலேயே அமீரகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் வரும் 9 ஆம் தேதி (ஆகஸ்ட் 9) சென்னை வந்தடைகின்றனர்.
பின்னர் சென்னையில் இருந்து அடுத்தநாளே (ஆகஸ்ட் 10) சிறப்பு விமானம் மூலம் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் அபீரகத்திற்கு செல்கின்றனர்.
அமீரகம் சென்ற உடன் அங்கு சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி சிஎஸ்கே வீரர்கள் அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்தாலும் இந்த பயணம் தொடர்பான தேதிகள் அனைத்தும் மத்திய அரசின் அனுமதிக்காக சென்றுள்ளதாகவும் அனுமதி கிடைத்த உடன் சிஎஸ்கே வீரர்களின் பயண விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar