சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் மானிய கோரிக்கை விவாதத்துடன் முடிவடைந்தது. அப்போதே, கொரோனா பாதிப்பு தொடங்கியதால், அந்த கூட்டத்தொடர் வேகமாக முடிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆண்டின் 2-வது கூட்டத்தொடரை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால், தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை அரங்கத்தில் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. சபாநாயகர் ப.தனபாலும் அங்கு சென்று ஆய்வு செய்து அனுமதி வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே, தமிழக அமைச்சர்களில் 6 பேரும், எம்.எல்.ஏ.க்களில் 34 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதனால், சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, எடுக்கப்பட்ட பரிசோதனையில், 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் மக்கள் விரும்பத்தக்கதுக் அணிந்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு மரணம் அடைந்த எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இன்று கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் எம்பி உள்ளிட்டோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Source: Maalaimalar