கதிர் ஆனந்த் எம்பியை மிரட்டியது தொடர்பான புகார் குறித்து டெல்லி சாணக்யபுரி காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். பல முக்கிய மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
கூட்டத்தொடரின் 9-வது நாளான நேற்று மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த், புலனாய்வு பிரிவினர் என்று கூறிக்கொண்டு 2 பேர் தன்னை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்ததாகவும், அவர்கள், மக்களவையில் பேசுவது குறித்து மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்பியதாகவும் குற்றச்சாட்டு கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மக்களவை தலைவர், உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
இந்நிலையில் கதிர் ஆனந்த் எம்பி புகார் பற்றி சாணக்யபுரி காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக கதிர் ஆனந்த் எம்பி தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கதிர் ஆனந்தின் அறைக்கு சென்றவர்கள் யார்? என்று கேள்வி எழுப்பிய காவல் துறையினர், அங்கிருந்த வருகை பதிவேடு மற்றும் கண்காணிப்பு தொலைக்காட்சி பதிவை ஆய்வு செய்கின்றனர்.
Related Tags :
Source: Maalaimalar