கொரோனா தொற்று குறைந்து வரக்கூடிய சூழலில், பொதுமக்கள் அனைவரும் மிக கவனமாக இருந்தால், கொரோனா பரவலை இன்னும் குறைக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், மருத்துவ பணியாளர்களுக்கான நல்வாழ்வு சிறப்பு முகாமில் மருத்துவ பணியாளர்களுக்கு தொற்று நோய் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் மருத்துவர் நாராயணபாபு, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ‘டீன்’ மருத்துவர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இன்னும் குறைய வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு. அவ்வாறு குறைவது நம்மிடம் தான் இருக்கிறது. கொரோனா தொற்று குறைந்து வரக்கூடிய சூழலில், பொதுமக்கள் அனைவரும் மிக கவனமாக இருந்தால், கொரோனா பரவலை இன்னும் குறைக்கலாம். பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கை கழுவுவது ஆகியவற்றை தொடர்ந்து செய்து வந்தால் நோய் தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும். தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்றின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் குறைந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar