Press "Enter" to skip to content

மெட்ரோ தொடர் வண்டி 2-ம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமித் ஷா

ரூ. 61.843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ தொடர் வண்டி 2ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேபோல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

விமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித் ஷாவை உற்சாகமாக வரவேற்றனர். இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித் ஷா, அங்கிருந்து காரில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்பட்டார். வழி நெடுக பா.ஜ.க. நிர்வாகிகள் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை அரசு விழா நடைபெற்று வருகிறது. இதில் அமித் ஷா கலந்து கொண்டு காணொலி மூலம் ரூ. 61.843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ தொடர் வண்டி 2ஆம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், தொழில்துறை அமைச்சர் எம்பி சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் அதிமுக, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »