இந்தியாவில் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க காணொலி மூலம் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் வெற்றியடைவோம் என நம்முடைய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இந்த உலகமே பாதுகாப்பான மற்றும் விலை குறைவான தடுப்பூசி மருந்தை பெறுவதில் கவனம் செலுத்துகிறது. அதனால்தான் உலக நாடுகள் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இன்னும் சில வாரங்களில் கொரோனா மருந்து தயாராகும் என வல்லுநர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் பச்சைக் கொடி காட்டியதும் தடுப்பூசி வழங்கும் பணி இந்தியாவில் தொடங்கும்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் தீவிரமான உடல் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கொரோனா தடுப்பூசி விலை தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேசி வருகிறது. இந்த விவகாரத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து முடிவு எடுக்கப்படும்.
தடுப்பூசியை வழங்குவதில் மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பீடுகையில் தடுப்பூசி வழங்குவதில் இந்தியா சிறப்பான அனுபவத்தையும், திறனையும் கொண்டிருக்கிறது.
கொரோனா தடுப்பூசி விவகாரம் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை அரசியல் கட்சி தலைவர்கள் தனக்கு அனுப்பலாம். அவர்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar