Press "Enter" to skip to content

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை – உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனையை தீர்க்க குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவை யாராலும் தடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

அந்த வழக்குகளை மொத்தமாக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் கூறிப்பட்டதாவது:-

இந்த வேளாண் சட்டங்கள் செல்லுபடியாகுமா? என்பது குறித்தும், போராட்டத்தால் மக்களின் உயிரை பாதுகாப்பது, மக்களின் உடைமைகளை பாதுகாப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.

எங்களுக்கு உள்ள அதிகாரத்தின் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் முயற்சிப்போம். இந்த சட்டத்தை தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்து இது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த குழு எங்களுக்கானது. இந்த பிரச்சனையை தீர்க்கவேண்டும் என நினைப்பவர்கள் இந்த குழுவில் பங்கேற்கலாம். இந்த குழு எந்த உத்தரவுமோ அல்லது தண்டனையோ விதிக்காது. இந்த குழு எங்களிடம் அறிக்கை மட்டுமே சமர்ப்பிக்கும்.

இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விவரம் அறியவே இந்த குழு அமைத்துள்ளோம். பிரச்சனையை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள குழுவை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்

இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். தொடர்ந்து போராடவேண்டுமென விவசாயிகள் நினைத்தால் அவர்கள் போராடிக்கொள்ளலாம்.

இந்த குழு இந்த வழக்கில் ஒரு அங்கம். வேளாண் சட்டங்களை தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன் படி மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கப்படுகிறது.    

என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிகழ்வு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »