Press "Enter" to skip to content

டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் – பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு

டொனால்டு டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது.

அப்போது தேர்தலில் தோல்வியடைந்த தற்போதைய அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து கடும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிபர் டிரம்பின் பதவி காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் நாடாளுமன்ற கலவரத்துக்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.‌ இதற்காக டொனால்டு டிரம்பை பதவி நீக்க வகைசெய்யும் தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டன.

இதற்காக, பிரிதிநிதிகள் சபையில் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை ஜனநாயக கட்சிகள் மேற்கொண்டன.

இந்நிலையில், டிரம்பை பதவி நீக்குவதற்கான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் 222 ஜனநாயக கட்சி உறுப்பினர்களும், 10 குடியரசு கட்சி உறுப்பினர்களும் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர்.

இதன் மூலம் இரண்டாவது முறையாக பதவிநீக்க நடைமுறைகளை அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்கொள்கிறார். டொனால்டு டிரம்ப் பதவி நீக்கப்படும் பட்சத்தில் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »