Press "Enter" to skip to content

எனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன்- கமல்ஹாசன் அறிவிப்பு

கமல்ஹாசன் தனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி மதுரையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதுவரையில் அவர் 5 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார். இந்தநிலையில் தனது உடல்நிலை காரணமாக அவர் தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை தலை நிமிர செய்ய ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை பூர்த்தி செய்திருக்கிறேன். 5 பாகங்களாக 5 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து தமிழ் மக்களை சந்திந்திருக்கிறேன். மாற்றத்துக்கான மக்கள் எழுச்சியை கண்ணாரக் கண்டு திரும்பி இருக்கிறேன்.

அதுபோலவே, கொரோனா பொதுமுடக்கத்தின்போது தொடங்கிய, ‘பிக்பாஸ்-பருவம் 4’ தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். இதுவும் மக்களுடனான பயணம்தான். நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம் உரையாடியதும், உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்னொரு ‘சர்ஜரி’ (அறுவை சிகிச்சை) செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதை மீறித்தான் திரைப்படம் வேலைகளும், அரசியல் சேவைகளும் தொடர்ந்தன. பிரசாரத்தை தொடங்கும்போதே, காலில் நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் என் பணிகளை புதிய விசையுடன் தொடர்வேன்.

மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையை தொழில்நுட்பத்தின் வாயிலாக போக்கிக்கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும், காணொளிக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும்.

என் மண்ணுக்கும், மொழிக்கும், மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும், என் குரல் எங்கும், எப்போதும் எதிரொலித்தபடி தான் இருக்கும். இப்போதும் அது தொடரும். ஒளி பரவட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »