Press "Enter" to skip to content

கோவையில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தேர்தலையொட்டி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று காலை 7.05 மணிக்கு கோவை கோனியம்மன் கோவிலில் சாமி பார்வை மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

தொடர்ந்து அவினாசி ரோடு மேம்பாலம், மரக்கடை, வேணுகோபால் ரோடு, ராஜவீதி, செல்வபுரம், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் பேசுகிறார். சங்கமம் திருமண மண்டபத்தில் இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடுகிறார். சுந்தரபுரம், மதுக்கரை மார்க்கெட், கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

முருகன் மஹாலில் பிற சமூகத்தினருடன் கலந்துரையாடுகிறார். பொள்ளாச்சி காந்தி சிலை, திருவள்ளுவர் திடல், ஜமீன் ஊத்துக்குளி, ஆணைமலைரவுண்டானா பகுதியில் பேசுகிறார். மாலையில் என்.எம்.சுங்கம் சந்திப்பு, சுல்தான்பேட்டை, சூலூர் நால்ரோடு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு புலியகுளம் விநாயகர் கோவிலில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனை தொடர்ந்து சிங்கநல்லூர், ரொட்டிகடை மைதானம், காளப்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், ரங்கநாதர் கோவில், பெரியநாயக்கன் பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம் சாய்பாபா கோவில், வடவள்ளி, தொண்டாமுத்தூர், பெரிய குளம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு, பேசுகிறார். கொடிசியா மைதானத்தில் தொழில் துறையினர் மற்றும் ஊர் பெரியவர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »