Press "Enter" to skip to content

கடந்த 10 ஆண்டுகளில் ரூ.551 கோடி செலவில் 11,464 கோவில்களில் திருப்பணி

2011-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 11 ஆயிரத்து 464 திருக்கோவில்களில் 551 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு குட முழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

சென்னை:

2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில்:-

தைப்பூசம் என்பது தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒரு முக்கியமான பண்டிகை ஆகும். மேலும் பல்வேறு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, தைப்பூசம் பண்டிகை தினத்தை பொது விடுமுறையாக இந்த அரசு அறிவித்துள்ளது.

2011-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை,11 ஆயிரத்து 464 திருக்கோவில்களில் 551 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு குட முழுக்கு நடத்தப்பட்டது.

2020-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில பெய்த அடைமழை (கனமழை)யால் சேதமடைந்த சிதம்பரம் அருள்மிகு இளமையாக்கினார் திருக்கோவிலின் திருக்குளச் சுற்றுச்சுவர் 2.61 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. நிவர் மற்றும் புரெவி புயல்களின் காரணமாக சேதமடைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர்கள் 4.34 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஹஜ் மற்றும் ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கான நிதி உதவியை அரசு உயர்த்தி உள்ளது. மொழிவாரி சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், உரிய சட்டத்தின் மூலம் மாநில சிறுபான்மையினர் ஆணையம் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »