தடுப்பூசி போடப்பட்டாலும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் குறிப்பிட்டு உள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் தடுப்பூசி போடப்பட்டாலும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் போக்குவரத்து சங்கங்களுக்கு முககவசம், சோப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அரசு ஏற்கனவே தொடங்கி உள்ளது. ஆனால் தடுப்பூசி கிடைத்ததால் நாம் மனநிறைவு அடைய வேண்டும் என்பது அர்த்தமல்ல. உண்மையில் தற்போதும், வருகிற நாட்களிலும் அனைவரும் முககவசம் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இதை கருத்தில் கொண்டே முககவசம் உள்ளிட்ட தடுப்பு பொருட்களை செஞ்சிலுவை சங்கம் வழங்கி வருகிறது’ என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் தானும் ஒரு அங்கமாக இருப்பது குறித்து மகிழ்வதாக கூறிய ஹர்சவர்தன், டெல்லியில் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படும் தொடர் வண்டி நிலையங்கள், காய்கறி மண்டிகளில் முககவசம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar