சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக கிரண்பெடியை அறிவித்தால் ஏகமனதோடு வரவேற்போம் என நாராயணசாமி கூறினார்.
புதுடெல்லி:
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, ஆளுநர் கிரண்பெடி மீது புகார் அளித்தார். அவருடன் அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோரும் சென்றனர்.
பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “ஆளுநர் கிரண்பெடி மக்கள் பணிகளுக்கு தொடர்ந்து இடையூறு செய்கிறார். அவரை திரும்பப் பெற கோரியுள்ளோம். முன்னாள் முதல்-அமைச்சர் என்.ரங்கசாமி, தேர்தல் வரும்போது மட்டுமே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பற்றி பேசுவார். மாநில அந்தஸ்தை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு தலைமை தேர்தல் கமிஷனரிடம் வலியுறுத்துவோம். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக கிரண்பெடியை அறிவித்தால் ஏகமனதோடு வரவேற்போம்” என்று கூறினார்.
பின்னர் அவர், புதுச்சேரி மாநிலத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
[embedded content]
Source: Maalaimalar