Press "Enter" to skip to content

2-வது காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்: 4 வருடமாக காதலித்து வந்த மாப்பிள்ளை அதிர்ச்சி

4 வருடமாக காதலித்த வாலிபருடன் நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று முன்தினம் திருமண வரவேற்பு முடிந்ததும் 2-வது காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்தார். இதனால் புதுமாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்தார்.

செங்குன்றம்:

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் நகரை சேர்ந்த 23 வயது இளம்பெண், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும், உடன் வேலை பார்க்கும் நெமிலிச்சேரியை சேர்ந்த 24 வயது வாலிபரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடைபெற இருந்தது.

நேற்று முன்தினம் மாலை இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மணமக்களின் நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். வரவேற்பு முடிந்தவுடன் மணப்பெண், மணமகள் அறையில் தூங்க சென்றார்.

நேற்று அதிகாலையில் மணப்பெண்ணின் தாயார், மணமகள் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு தனது மகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

திருமண நேரத்தில் மணப்பெண் மாயமானதால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் திருமணம் நின்றதால் மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுபற்றி வில்லிவாக்கம் காவல் துறை நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணையில் மாயமான இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டு இருந்தது தெரிந்தது. திருமண வரவேற்பு முடிந்ததும், நள்ளிரவில் புதிதாக காதலித்த 2-வது காதலருடன் மண்டபத்தை விட்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிந்தது.

இந்த நிலையில் மாயமான மணப்பெண், தனது 2-வது காதலருடன் கிண்டி காவல் துறை நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும், இருவீட்டாரும் அங்கு சென்று மணப்பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் 4 வருடங்களாக காதலித்த முதல் காதலனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். புதுகாதலனைதான் திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக கூறிவிட்டு 2-வது காதலருடன் சென்றுவிட்டார்.

அதைகேட்டு இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். 4 வருடங்களாக காதலித்து திருமணம் செய்ய இருந்த இளம்பெண், திருமண நேரத்தில் வேறு ஒரு வாலிபருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் புதுமாப்பிள்ளைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »