Press "Enter" to skip to content

மெட்ரோ தொடர் வண்டி கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது

தமிழக அரசு மெட்ரோ ரெயிலுக்கான கட்டணத்தை குறைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை:

சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ தொடர் வண்டி இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு முன்பாக 1 லட்சத்து 13 ஆயிரம் வரை அதிகபட்சமாக பயணிகள் தினசரி பயணித்து வந்தனர். நோய் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த உடன் அரசு பிறப்பித்த தளர்வுகளின் அடிப்படையில் மெட்ரோ தொடர் வண்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரையிலான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

பயணிகளிடம் அதிகபட்ச கட்டணமாக ரூ.70 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தைக் குறைக்க அனைத்து தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை பரீசிலித்த முதலமைச்சர் பழனிசாமி, மெட்ரோ தொடர் வண்டி கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, சென்னை மெட்ரோ தொடர் வண்டி நிறுவனம் புதிய கட்டண விவரத்தை நேற்று வெளியிட்டது. அதன்படி டோக்கன் முறையில் வாங்கப்படும் அனுமதிச்சீட்டுகளுக்கு அதிகபட்சமாக இருந்த ரூ.70 கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பயண அட்டை மூலம் அனுமதிச்சீட்டு பெறுபவர்களுக்கு பத்து சதவீதமும், கியூ.ஆர். குறியீடு மூலம் அனுமதிச்சீட்டு பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது என சென்னை மெட்ரோ தொடர் வண்டி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »