‘மன்கிபாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகிற போதெல்லாம் தமிழில் வணக்கம் சொல்லித்தான் பேச ஆரம்பிக்கிறார்.
திருக்குறள், பாரதி பாடல் என தமிழ் இலக்கியங்களை குறிப்பிடுவதும் உண்டு. இது தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் அவர் கொண்ட ஆர்வத்தை குறிக்கிறது.
இந்த நிலையில் நேற்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ (மனதின்குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசியபோது தமிழ் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.
இதுபற்றி அவர் கூறியதாவது இதுதான்-
சில நேரங்களில் ஒரு சின்ன கேள்வி கூட மனதை அசைத்துப்போட்டு விடுகிறது. இந்த கேள்விகள் மிக நீளமானவை அல்ல. மிக எளிமையானவை. ஆனாலும் அவை நம்மை சிந்திக்க வைத்து விடுகின்றன.
சில தினங்களுக்கு முன்னால் ஐதராபாத்தை சேர்ந்த அபர்ணா ரெட்டி, “நீங்கள் பல வருடங்களாக பிரதமராக இருந்து வருகிறீர்கள். நிறைய வருடங்கள் முதல்- மந்திரியாக இருந்துஇருக்கிறீர்கள். ஏதாவது ஒன்றை தவற விட்டு விட்டதாக உணர்கிறீர்களா?” என கேட்டார்.
அபர்ணாவின் கேள்வி எளியதுதான். அதே போன்று சம அளவில் கடினமானதும்கூட.
இதைப்பற்றி நான் யோசித்தேன். என் குறைபாடுகளில் ஒன்று, என்னால் தமிழ் கற்றுக்கொள்ள அதிக முயற்சி எடுக்க முடியவில்லையே என்பதுதான். இதை நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
தமிழ், உலகின் தொன்மையான மொழி. என்னால் தமிழ் கற்றுக்கொள்ள முடியவில்லை. இது ஒரு அழகான மொழி. உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது.
தமிழ் இலக்கியத்தின் தரம் குறித்தும், தமிழ் கவிதைகளின் ஆழம் பற்றியும் பலரும் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியா பல மொழிகளின் பூமி. இது நமது கலாசாரத்தையும், பெருமையையும் குறிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar