இமாசலப் பிரதேசத்தில் மக்கள் தொடர்புத்துறை தட்டச்சில் செய்த எழுத்து பிழையால், முதல்-மந்திரிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது.
சிம்லா:
இமாசல பிரதேசத்தில் முதல் மந்திரியாக ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் முதல் மந்திரிகள் மாற்றப்பட்டனர். இதையடுத்து இமாசலிலும் முதல் மந்திரி மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநிலத்தில் வதந்தி பரவியுள்ளது.
இந்நிலையில், மாநில மக்கள் தொடர்புத்துறை டுவிட்டரில் சமீபத்தில் வெளியிட்ட பதிவில், முதல் மந்திரி பெயரை ஜெய்ராம் என்பதற்கு பதில் ‘ஜாவோ ராம்’ என ஹிந்தியில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. இந்தியில் ‘ஜாவோ’ என்றால், செல் என அர்த்தம்.
இதையடுத்து, முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் மாற்றப்பட போவதாக தகவல் வெளியானது. தவறை உணர்ந்த மக்கள் தொடர்புத் துறை, உடனடியாக தவறை திருத்தம் செய்தது.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் குல்தீப் ரத்தோர் கூறுகையில், இது எதேச்சையாக நடந்த தவறாக இருக்கலாம். ஆனால் நடக்கப்போவது தான் வெளியாகியுள்ளது. முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் விரைவில் மாற்றப்பட போவது உண்மை என தெரிவித்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar