வெறுப்பு பேச்சு வழக்கில் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்டோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டேராடூன் :
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த மாதம் 17-ம் தேதி தர்ம சன்சத் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்லி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய், யந்தி நரசிங்கானந்த் உள்ளிட்ட பல்வேறு இந்து தலைவர்கள் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில், முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும், இனப்படுகொலை செய்ய வேண்டும் என இந்து தலைவர்கள் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர், ஐஐஎம் மாணவர்கள், அதிகாரிகள் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் இந்து மதத் தலைவர் யதி நரசிங்கானந்த் என்பவரை உத்தரகாண்ட் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த மாநாட்டில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய ஜிதேந்திர தியாகி என்பவரை ஏற்கனவே காவல் துறையினர் கைது செய்திருந்தனர். அவர் தாக்கல் செய்த பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட யதி நரசிங்கானந்தையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
வெறுப்பு பேச்சு வழக்கில் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்டோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar