உத்தரகாண்டில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க. உறுப்பினர் பதவியில் இருந்தும் ஹரக் சிங் ராவத் நீக்கப்பட்டுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டேராடூன்
உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அமைச்சர் ஹரக் சிங் ராவத், மாநில அமைச்சரவையில் இருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் 6 ஆண்டுகளுக்கு பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராவத் நீக்கப்படுவதாக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ஷதாப் ஷம்ஸ் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. எந்த வித அழுத்தங்களுக்கும் அடிபணியாத கட்சி என்பதற்கு இது வலுவான ஆதாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்வார் தொகுதி எம்எல்ஏவாக உள்ள ராவத், தனது மருமகள் அனுக்ரிதி குசேன் தேர்தலில் போட்டியிட மாநில பாஜகவிடம் சீட் கேட்டு வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருந்த ராவத், காங்கிரஸுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஹரித்வாரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக ராவத் சமீபத்தில் மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பாஜக அவரை நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்தும் ராவத் நீக்கப்பட்டுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar