சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகளும் திரளாக பிறந்தநாள் விழாவில் பங்கேற்றனர். அவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இனிப்புகளை வழங்கினர்.
இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சின்னையா, மாதவரம் மூர்த்தி, இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச்செல்வன், துணைச் செயலாளர் இ.சி.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து கொண்டே இருக்கும் நிலையில் ராயப்பேட்டை பகுதியிலும் மழை பெய்தது. பிறந்தநாள் விழா நடைபெற்ற அ.தி.மு.க. தலைமை கழகம் அமைந்துள்ள பகுதியிலும் இன்று காலையில் மழை பெய்து கொண்டே இருந்தது.
இருப்பினும் கொட்டும் மழையிலும் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. கட்சி தொண்டர்களும், தலைவர்களும் மழையில் நனைந்தபடியே எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தினர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி கட்சியினர் தங்களது வீடுகள் முன்பும், பொது இடங்களிலும் எம்.ஜி.ஆர். படத்தை அலங்கரித்து வைத்து மாலை அணிவித்து இருந்தனர்.
புகைப்படம் முன்பு ஊதுபத்தி, பழங்களை வைத்தும் வழிபட்டனர். பிறந்தநாளை கொண்டாடும் வகையில் எம்.ஜி.ஆர். பாடல்களையும் ஒலிபரப்பினார்கள். இதனால் சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் திரும்பிய திசையெல்லாம் எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் பொன்மனசெம்மல், புரட்சித் தலைவர் மருத்துவர் எம்.ஜி.ஆருக்கு புகழஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar