Press "Enter" to skip to content

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி – மாநிலங்களுக்கு,மத்திய சுகாதாரத்துறை கடிதம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு அனைத்து வித கொரோனா தடுப்பூசிகளும் மூன்று மாதங்களுக்கு பிறகே போட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி மூன்றாம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 10 முதல் செயல்படுத்தப்படுகிறது. 

முதல்கட்டமாக சுகாதாரத்துறை, காவல்துறை உள்பட முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2வது தவணை தடுப்பூசி போட்டவர்கள் 9 மாதங்கள் கழித்து  பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  எழுதி உள்ள கடிதத்தில்,கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்களுக்கு,  பூஸ்டர் டோஸ் உள்பட அனைத்துவித கொரோனா தடுப்பூசிகளையும் மூன்று மாதங்களுக்கு பிறகே போட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அறிவியல் சான்றுகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »