Press "Enter" to skip to content

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி

சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர்.

சென்னை :

இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்அமைச்சர் வழிகாட்டுதலின்படி கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் சபாநாயகர் (நடராஜர்) கோவிலில் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் சபாநாயகரை பார்வை செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்தது.

கொரோனா காரணமாக கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து பார்வை செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது.

தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு அனைத்து கோவில்களிலும் ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் தொடரும் நிலையில், இப்போது கோவிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் பார்வை செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகம விதிகளை பின்பற்றி பக்தர்கள் பார்வை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துகளை அரசு பரிசீலனை செய்து, கோவிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்…கேட்ட வரங்களை வாரி வழங்கும் காரைக்குடி கொப்புடை அம்மன் கோவில்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »