Press "Enter" to skip to content

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 13 லட்சம் வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு

சொத்து வரி உயர்வு குறித்து ஒவ்வொருவருக்கும் அறிவிப்பு அனுப்ப வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் முழுவதும் இந்த பணி நடைபெறும்.

சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டது. முந்தைய சென்னை மாநகராட்சி பகுதியில் குடியிருப்புகளுக்கு 600 சதுர அடி வரை 50 சதவீதமும், 601 முதல் 1200 சதுர அடி கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1201 முதல் 1800 சதுர அடி கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், 1800 சதுர அடி மேல் உள்ள கட்டிடங்களுக்கு 150 சதவீதமும் சொத்து சரி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு 100 சதவீதமும், குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கு 150 சதவீதமும் உயர்த்தப்பட்டது.

2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரி விதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு 50 சதவீதமும், முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், திரையரங்குகளுக்கு புதிய முறையில் கட்டிடத்தின் பரப்பளவு, அடிப்படை தெரு கட்டணம் அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. காலி மனைக்கு 50 பைசாவாக இருந்த சொத்து வரி சதுர அடிக்கு ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்வது குறித்து பொது மக்களிடம் ஆட்சேபனை கருத்தினை கேட்டு அறிவிப்பாக வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்ட 30 நாட்களுக்குள் ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. கடந்த 11-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. 50-க்கும் குறைவான ஆட்சேபனை கடிதங்கள் வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்து மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 30-ந் தேதி நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அதைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்து ஒவ்வொருவருக்கும் அறிவிப்பு அனுப்ப வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் முழுவதும் இந்த பணி நடைபெறும்.

இது குறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரி சுகுமார் பாபு கூறியதாவது:-

சொத்து வரி உயர்வு குறித்து ஆட்சேபனை தெரிவித்து 40 மனுக்கள் மட்டுமே வந்துள்ளன. அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும். அறிவிக்கப்பட்ட சொத்து வரி உயர்வு ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் எவ்வளவு உயர்ந்துள்ளது என்ற விவரம் அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் மாதம் முழுவதும் 13 லட்சம் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிட உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வினியோகிக்கப்படும்.

2022-23 முதல் அரையாண்டிற்கான சொத்து வரி விவரம் முழுமையாக தெரிவிக்கப்படும். அதன்படி சொத்து வரி வசூலிக்கும் பணி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »