Press "Enter" to skip to content

ஆஸ்கர் வென்ற இயக்குநர் கார்த்திகிக்கு ரூ.1 கோடி வழங்கி கவுரவித்த தமிழக அரசு!

சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘ தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர் விருது வென்றது. இதன் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தாய் யானையை பிரிந்து காயங்களுடன் திரிந்த குட்டி யானை ஒன்று வனத்துறையின் பராமரிப்புக்கு வந்தபோது, யானை பராமரிப்பாளார்களான பொம்மன் – பெள்ளி தம்பதியர் அதனை அரவணைத்து வளர்க்கின்றனர். பழங்குடியினத்தை சேர்ந்த இந்த தம்பதிக்கும், குட்டி யானைக்கும் இடையிலான உணர்வுபூர்வமான உறவை ’தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணக் குறும்படம் மூலம் காட்சிப்படுத்தியிருந்தார் நீலகிரியைச் சேர்ந்த இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ். இந்த ஆவணப்பட குறும்படத்திற்கு அண்மையில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பின்போது ஆஸ்கர் விருதை முதல்வரிடம் காண்பித்து அவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸுக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கார்த்திகி, “ஒரு பெண்ணாக தாய் தமிழ்நாட்டிற்காக ஆஸ்கர் விருதை பெற்றுக்கொடுத்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »