Press "Enter" to skip to content

சிவராஜ் குமார் நடிப்பில் கன்னட படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்

கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் பல்வேறு முக்கியமான படங்களை இயக்கிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்துவதை அவர் விடவில்லை. 2014-ம் ஆண்டு ரஜினியை வைத்து ‘லிங்கா’ படத்தை இயக்கியவர், தொடர்ந்து 2016-ம் ஆண்டு ‘கோடிங்கோபா 2’ (Kotigobba 2) என்ற கன்னட படத்தை இயக்கினார். இந்தப் படம் தமிழில் ‘முடிஞ்சா இவன பிடி’ என்ற பெயரில் வெளியானது. தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணாவை வைத்து ‘ஜெய் சிம்ஹா’, ‘ரூலர்’ படங்களையும் இயக்கினார்.

இந்நிலையில், தற்போது அவர் அடுத்ததாக கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். சிவராஜ் குமாருடன் இணைந்து கன்னட நடிகர் கணேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை கன்னட தயாரிப்பாளர் சூரப்பா பாபு தயாரிக்கிறார். இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் சூரப்பா பாபு கூறுகையில், “இது ஒரு சுவாரஸ்யமான கூட்டணி. படம் கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

சிவராஜ் குமார் தற்போது தமிழில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்திலும், தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் வேலையாக இருக்கிறார். கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனால் அவர் ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பின்னர் மே மாதத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »