நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படம் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரூ.100 கோடி வரவு செலவுத் திட்டத்தில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அகிலன்’. சாம்.சி.எஸ் இசையமைத்திருந்த இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்படம் பார்வையாளர்களை பெரிதும் கவராத நிலையில், அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’, ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ உள்ளிட்ட படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் வெளியானக உள்ளன.
இந்நிலையில் இந்தப் படங்களைத் தொடர்ந்து உருவாகும் ஜெயம் ரவியின் 32ஆவது படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாகவும், படத்தின் வரவு செலவுத் திட்டம் ரூ.100 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் 10க்கும் அதிகமான மொழிகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் வெளியான ‘கோமாளி’ படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
Source: Hindu