Press "Enter" to skip to content

13 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் படம் இயக்கும் சசிகுமார் – கதாநாயகன் அனுராக் காஷ்யப்

நடிகர் சசிகுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க உள்ள நிலையில், அந்தப்படத்தின் கதாநாயகனாக அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘சுப்ரமணியபுரம்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். ஜெய், சசிகுமார் நடிப்பில் 2008-ல் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘ஈசன்’ படத்தை சசிகுமார் இயக்கினார். இதனையடுத்து அவர் நடிப்பில் கவனம் செலுத்தத்தொடங்கினார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களமிறங்குகிறார் சசிகுமார். இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த சசிகுமார், தனக்கு இருந்த கடன் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாகவும், விரைவில் இயக்கத்துக்குத் திரும்பப் போவதாகவும் கூறியிருந்தார்.

சசிகுமார் மீண்டும் திரைப்படம் இயக்குவது உறுதியாகி உள்ள நிலையில், அதற்கான ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ளன. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் கதாநாயகனாக இயக்குநர் அனுராக் கஷ்யப் நடிக்க உள்ளதாகவும், நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கிராமத்துப் பின்னணியைக் கொண்ட பீரியாடிக் கதையாக இது உருவாக இருப்பதாகவும், ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »