Press "Enter" to skip to content

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரலாற்று திரிபு: மணிரத்னத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை: பொன்னியின் செல்வன் படம் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படவில்லை எனக் கூறி இயக்குநர் மணிரத்னத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், “அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றைத் திரித்து இயக்கியுள்ளார். முக்கிய கதாபத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது சுய லாபத்திற்காக வரலாற்றை தவறாகப் பயன்படுத்தி உள்ளார். வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும்.

வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கியும் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை இந்த திரைப்படத்தில் திரித்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு எதிராக, மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரிடம், பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர், இல்லை என்று பதிலளித்தார். தொடர்ந்து நீதிபதிகள், நாவலை படிக்காத நிலையில் வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும்? பொன்னியின் செல்வன் படம் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »