ஒரு மணி நேரத்தில் 500 கோலங்கள் வரைந்த 1000 மாணவிகள் – ஆசிய சாதனை முயற்சிJan 29, 2020 16:58:35 pmJan 29, 2020 16:58:49 pmWeb Team
தமிழர்களின் பெருமையை கொண்டாடும் வகையில் ஒரு மணி நேரத்தில் 500 கோலங்கள் வரைந்து 1000 மாணவிகள் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு நாளும் விடியலுக்கு முன்பாக தமிழகத்தில் கிராமங்கள், நகரங்களில் வாழும் லட்சக்கணக்கான பெண்கள் தங்களின் வீட்டுவாயில்கள், கோயில்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் வாயில்கள் முன்பு கோலம் வரைவது தமிழக கலாசாரமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘தமிழ் வழியில் வாழ்க்கையை கொண்டாடுதல்’ என்ற தலைப்பில் தனியார் நிறுவனம் மற்றும் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரி மாணவிகள் 1000பேர் கலந்துகொண்ட கோலங்கள் வரையும் நிகழ்வு வடகோவை பகுதியிலுள்ள அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஒரே இடத்தில் ஒரு மணிநேரத்தில் 500 வகையான புள்ளி கோலங்களை வரைந்து ஆசியன் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியில் மாணவிகள் ஈடுபட்டனர். சமீப காலமாக வீட்டு வாயிலில் கோலமிடுவது என்பது குறைந்துவிட்ட நிலையில், இதுவரை வீட்டில் கோலமிடாத மாணவிகள் ஒருங்கே ஒரே இடத்தில் கோலமிட்டுள்ளதாகவும், கோலமிடத் தெரியாத சில மாணவிகள் கூட கோலம் வரைய வேண்டும் என்ற ஆர்வத்தில் வீட்டில் கோலமிட கற்றுகொண்டு இந்நிகழ்வில் கலந்துகொண்டு கோலமிட்டுள்ளதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் தெரிவித்தனர். View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM
© Puthiyathalaimurai | ALL RIGHTS RESERVED
Source: PuthiyaThalaimurai