Press "Enter" to skip to content

“கொரோனா பாதிப்பால் சீனாவில் உணவு தட்டுப்பாடு கடுமையாக உள்ளது” – தமிழகம் திரும்பிய மாணவி

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் கடும் உணவு தட்டுப்பாடு நிலவுவதாக சீனாவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள அன்னூர் மருத்துவ மாணவி தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் அனுஸ்ரீ மற்றும் அபிநயா ஸ்ரீ. இவர்கள் சீனாவில் உள்ள சாங்கி சீ புரோவின்ஸ் சியான் மாகாணத்தில் மருத்துவம் பயின்று வந்தனர்.

இவர்களுடன் முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீயான் தாங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அங்கு வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கு படித்து வரும் பெரும்பாலான மாணவர்கள் அங்கிருந்து இந்தியா திரும்பி வருகின்றனர். ஆனால் தாயகம் திரும்புவது மிகவும் சிரமம் என்றும் பெரும் முயற்சிகளுக்கு பின்பு இந்தியா வந்துள்ளதாகவும் அனுஸ்ரீ கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “இதுவரை இல்லாத வகையில் விமான சேவை அடுத்தடுத்து ரத்து செய்யபட்டது, தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனது தந்தையின் முயற்சியால் தற்போது இந்தியா வந்துள்ளேன். அங்கு தங்கியிருந்தபோது கொரோனா வைரஸ் காரணமாக தெருக்களே வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கபட்டு உணவு தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு எண் 95 மற்றும் சர்ஜிக்கல் மாஸ்க் ஆகியவை கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

பெரும்பாலான மருந்து கடைகளில் தற்போது ஸ்டாக் இல்லை. அதனால், பெரும் சிரமம் ஏற்பட்டது. சீனாவில் இருந்து மலேசியா வழியே திருச்சி வந்து அங்கிருந்து கோவை வந்தோம். விமான நிலையத்தில் வந்த போது எங்களை மருத்துவ பரிசோதனை செய்து கொரோனா வைரஸ் குறித்து எந்த அறிகுறியும் இல்லாததால் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்” எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »