தமிழகத்திலேயே காவலர் நண்பர்கள் குழுவில் பெண்கள் இணைந்த முதல் மாவட்டம் காஞ்சிபுரம் என அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் காவலர் நண்பர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிமுக விழா காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவலர் நண்பர்கள் குழுவின் பணிகள் குறித்த விளக்கங்களையும் கல்லூரி மாணவர்கள் காவல்துறையுடன் இணைந்து எவ்வாறு பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “இந்த குழுவில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கலைக் கல்லூரி, மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 8 மாணவிகள், 346 மாணவர்கள் என 354 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். தமிழகத்திலேயே காவலர் நண்பர் குழுவில் பெண்கள் முதன்முதலாக இணைந்திருப்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான்” எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் கலைச்செல்வம், அருள்மணி மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai