திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்த மகள் முகத்தில் அமிலம் வீசிய தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் எழுந்துள்ளது.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சாய்குமார். ஏசி மெக்கானிக்கான இவர் சென்னையில் வேலைபார்த்து வருகிறார். சாய்குமார் தான் வசித்து வரும் வீட்டருகே உள்ள தீபிகா என்ற பெண்ணை 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த தீபிகாவின் தந்தையும் விருப்ப ஓய்வு பெற்ற தலைமைக் காவலருமான பாலக்குமார் வீட்டை காலி செய்துவிட்டு திருத்தணியில் குடியேறியுள்ளார்.
மேலும் திருப்பதி கல்லூரியில் மகளை சேர்த்துள்ளார். அத்துடன் தீபிகாவை வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லாதவாறு அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா, கடந்த ஜூன் மாதம் போன் செய்து சாய்க்குமாரை வரவழைத்துள்ளார். இருவரும் பெங்களூர் சென்று திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், சாய்குமாரின் வீட்டிற்கு தீபிகாவின் தந்தை பாலகுமார் வந்துள்ளார். அம்மாவின் உடல் நிலை சரியில்லாததால் தன்னுடன் வீட்டிற்கு வருமாறு, 5 மாத கர்ப்பிணியாக உள்ள தீபிகாவை அவர் அழைத்துள்ளார். இதற்கு தீபிகா மறுக்கவே, ஆத்திரம் அடைந்த தந்தை பாலகுமார் மற்றும் அவருடன் வந்திருந்த சிலர், கையில் வைத்திருந்த பவுடர் கலந்த அமிலத்தை தீபிகாவின் முகத்தில் பூசினர். அப்போது அதனை தடுக்க வந்த மாமியார் மற்றும் மூத்த மருமகள் முகத்திலும் அமிலத்தை பூசி விட்டு தீபிகாவை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
இது குறித்து சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையறிந்த தீபிகாவின் தந்தை இரவு 7 மணியளவில் வேப்பம்பட்டு மெயின் ரோட்டில் தீபிகாவை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
பின்னர், தீபிகா கூறுகையில், தந்தை பாலகுமார் கர்ப்பிணிப் பெண் என்றும் பார்க்காமல் அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும், சாய்குமாரை விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியதாக தெரிவித்தார்.
பெற்ற மகள் என்றும் பாராமல், கர்ப்பிணி என்பதை உணராமல் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாய்க்குமார் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமிலம் வீச்சில் பாதிக்கப்பட்ட 2 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாமியார் தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது குறித்து செவ்வாப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai