மேட்டூர் அருகே மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை அறிந்த கணவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர், சின்னத்தண்டா, சி.எஸ் காலனியைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் தீபக்(24). இளம் பட்டதாரியான இவர் கொளத்தூரில் உள்ள உரக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய மாமன் மகளான வேதவள்ளி(21) என்ற பெண்ணை காதலித்த நிலையில், இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் வேதவள்ளி, தீபக்கை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு அருகிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று பெற்றோர் பார்க்கையில் வேதவள்ளி(21) மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட வேதவள்ளி உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவி தீக்குளித்த தகவலறிந்த தீபக் எலி மருந்து தின்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், வேதவள்ளி தனது சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களால் ஏற்பட்ட வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. திருமணமான நான்கே மாதத்தில் தம்பதியர் தற்கொலை முயற்சி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai