வீட்டு மாடியில் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அருப்புக்கோட்டை அருகே ராஜீவ் நகரைச் சேர்ந்த மணிகண்டன் – மீனாட்சி தம்பதியின் மகன் கோகுல் (13). இவர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கோகுல் நேற்று மாலை தன் வீட்டின் மாடியில் சக நண்பர்களுடன் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று பந்து மாடியின் அருகே சிக்கியுள்ளது. அதனை எடுப்பதற்கு வீட்டு மாடியில் இருந்த அலுமினிய கம்பியை பயன்படுத்தியுள்ளார். பின்னர் அந்த கம்பியை கீழே போடும் போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் பட்டுள்ளது. அதில் மின்சாரம் தாக்கி, கோகுல் தூக்கி வீசப்பட்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் சிறுவன் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai