அதிமுகவில் உள்ள பல அமைச்சர்கள் இப்படிதான் இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் நடந்த யானைகள் முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். யானைகள் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் நடந்து சென்ற போது அவரது செருப்பு புல் தரையில் மாட்டிக் கொண்டது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து அமைச்சர் கழற்றச் சொன்னார். இந்நிலையில், சிறுவனை அழைத்து அமைச்சர் தனது செருப்பை கழற்ற வைத்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், பேரன் மாதிரி இருந்ததால் சிறுவனை அழைத்து செருப்பை கழற்றச் சொன்னேன். சிறுவனை செருப்பு கழற்ற சொன்னதில் தவறு இருப்பதாக நினைக்கவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் முதுமையின் காரணமாக செருப்பை கழட்டச் சொல்லி இருப்பாரே தவிர, உள்நோக்கத்துடன் சொல்லி இருக்க மாட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தநிலையில், உதகை எம்எல்ஏவான காங்கிரஸைச் சேர்ந்த உதய், இது மனிதாபிமானம் அற்ற செயல் என தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் பலர் திண்டுக்கல் சீனிவாசனை போலத்தான் நடந்துகொள்கின்றனர். எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.
சிறுவனை செருப்பு கழற்ற சொன்னதில் தவறு இருப்பதாக நினைக்கவில்லை’ – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai