பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் கடன் விகிதம் 71% அதிகரித்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், செய்தியாளர்களிடம் பேசியதாவது,
நாட்டின் மொத்த கடனும், தனி நபர் கடனும் அதிகரித்துள்ளது. ஆக வரவிருக்கும் பட்ஜெட்டில் ஆவது போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், வாருங்கள் அதை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
இந்தியாவின் மொத்த கடன்
இந்தியாவின் கடன் கடந்த 2014 மார்ச் மாதம் 53.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் செப்டம்பர் 2019ல் இது 91.01 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சொல்லப்போனால் கடன் 37.9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட 71.36 சதவிகிதமாகும். மேலும் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் விகிதாசாரமும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தனிநபர் கடன் அதிகரிப்பு
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் விகிதம் முன்னர் 5.3 சதவிகிதமாக இருந்தது, இது இப்போது இரு மடங்காக அதிகரித்து 10.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நாங்கள் பிரதமர் மோடியையும், நிதியமைச்சரையும் கேட்கிறோம் வருமானம் உயரவில்லை. வேலை வாய்ப்பும் இல்லை. புதிய முதலீடும் இல்லை. ஆனால் இப்படி உயர்ந்து வரும் கடனை எப்படி நாங்கள் சுமப்பது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசின் பிழைக்காக மக்கள் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
பாரதீய ஜனதா கட்சி அரசின் தோல்விக்காக இந்திய மக்கள் இந்த கடனை சுமக்க வேண்டுமா? பிரதமரும், நிதி அமைச்சரும் வரவிருக்கும் 2020 – 21 பட்ஜெட்டிலாவது இந்த கவலையை தயவு செய்து நிவர்த்தி செய்யுங்கள் என்றும் கவுரவ் வல்லவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தேசிய தனி நபர் கடன்
இதோடு 2014ம் ஆண்டில் 41,200 கோடி ரூபாயாக இருந்த தேசிய தனிநபர் கடன், 2019ல் 68,400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 66 சதவிகிதம் அதிகமாகும். இதே போல் 2014ல் ஒரு தனி நபரின் ஜிடிபி விகிதமானது 1574 டாலராக இருந்தது. ஆனால் இது 2019ல் 2,041 டாலராக அதிகரித்துள்ளது. இது 30% அதிகரிப்பாகும்.
அழுத்தம் தான் அதிகரிக்கும்
நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த இந்த நேரத்தில், நேரடி மற்றும் மறைமுக வரி வருவாயில் கணிசமான குறைவினாலும், நிதிப் பற்றாக்குறை இலக்கு நிலைக்கு அப்பால் செல்ல வாய்ப்புள்ளது. இந்த பற்றாக்குறையானது போதுமான அபிவிருத்தி நடவடிக்கை எடுக்க முடியாமல் போகலாம். இதனால் கூடுதல் அழுத்தம் தான் ஏற்படும் என்றும் கவுரவ் கூறியுள்ளார்.
Source: Goodreturns