இந்தியாவில் பலதரப்பட்ட வீட்டுக்கடன் சேவைகளை அளிக்கும் மிகப்பெரிய நிறுவனமான ஹெச்டிஎப்சி, நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சந்தையில் தானும் பங்கெடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு எந்தொரு வங்கியும் எடுத்திடாத ஒரு முடிவை எடுத்துள்ளது. இது சக தனியார் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஹெச்டிஎப்சி நிறுவனம் டெக்னாலஜி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் வருடம் 100 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்யத் திட்டமிட்டுள்ளது. இது இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மத்தியில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 500 ரூபாயா.. இன்னும் குறையுமா..!
தீபக் பாரீக்
வீட்டுகடன் சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி-இன் தலைவர் தீபக் பாரீக் இனி வரும் காலத்தில் ஒவ்வொரு வருடமும் தலா 100 கோடி ரூபாய் அளவிலான நிதியை டெக்னாலஜி ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் ஸ்டார்ட்அப் முதலீட்டுக்காக ஒரு தனிக் குழுவை அமைத்து ஸ்டார்ட்அப் சந்தை மற்றும் முதலீடு ஆகியவற்றைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும் தீபக் பாரீக் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட்அப்
இந்தியாவில் தற்போது பெரும்பாலான அன்னிய முதலீடு, மத்திய அரசின் திட்டங்கள் என அனைத்தும் ஸ்டார்ட்அப் சந்தையைச் சுற்றியே இருக்கிறது. அதுமட்டும் அல்லாமல் முதலீட்டுக்கு வேகமான வளர்ச்சியும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் தான் உள்ளது. இப்படியிருக்கையில் இந்த முதலீட்டு வாய்ப்பை எப்படி விடுவது என ஹெச்டிஎப்சி வங்கி தரப்புக் கூறுகிறது. மேலும் இந்த 100 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தை இந்நிறுவனத்தின் சமீபத்திய நிர்வாகக் கூட்டத்தில் தீபக் பாரீக் அறிவித்தார், இதற்கு ஒப்புதல் கிடைத்த நிலையில் முதலீடு செய்வதற்கான பணிகளும், ஆய்வுகளும் நடந்து வருகிறது. அடுத்த 2 மாதத்தில் முழு அணியும் தயாராகும் எனவும் தெரிகிறது.
எஸ்பிஐ
ஹெச்டிஎப்சி மட்டும் அல்லாமல் இந்தியாவில் தற்போது எஸ்பிஐ வங்கி உட்படப் பல கார்பரேட் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் நேரடியாக முதலீடு செய்யத் தனிப்பட்ட முறையில் ஆய்வுகளைச் செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. சொல்லப்போனால் இது இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குச் சுக்கிரன் உச்சத்தில் இருக்கும் காலம் எனக் கூறலாம். இதற்கும் காரணம் உண்டு.
சீனா பொருளாதாரம்
சீனாவில் தற்போது பல்வேறு காரணங்களுக்காகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது மந்தமான சூழ்நிலையில் உள்ளது. இதனால் சீனாவில் புதிய வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்காத நிலையில், சீன முதலீட்டாளர்கள் தற்போது இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும், உற்பத்தித் துறையிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டு இந்தியாவிற்குப் படையெடுத்து வருகின்றனர்.
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 20 சீன கார்ப்பேட் நிறுவனங்களும், முதலீட்டு நிறுவனங்களும் இந்திய சந்தையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காகக் களமிறங்கியுள்ளது.
முதலீட்டு அளவு
சீன முதலீட்டாளர்கள் 2019ஆம் ஆண்டே அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர். 2018இல் இந்தியச் சந்தையில் வெறும் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்த நிலையில் 2019இல் சுமார் 3.9 பில்லியன் டாலர் முதலீடு செய்து சுமார் 100 சதவீத அதிகப் பணத்தை இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
தற்போது இந்தியச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வரும் சீன முதலீட்டாளர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது இந்த முதலீட்டு அளவு 2020இல் 6 முதல் 8 பில்லியன் டாலர் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Goodreturns