டாவோஸ் : “இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது; நாட்டில் நுகர்வும் அதிகரித்து வருகிறது,” என, பேங்க் ஆப் அமெரிக்காவின் தலைமை செயல் அதிகாரி டி.மொய்னிஹான் கூறியுள்ளார்.
டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்திய பொருளாதாரம் குறித்து கூறியதாவது:இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையிலுள்ளது. அந்நாட்டின் நுகர்வும் அதிகரித்து வருகிறது.இந்தியா மிகப் பெரிய நாடு; அது வளர்ந்து வருகிறது. அதன் மக்கள் தொகையில், இள வயதினர் அதிகம் உள்ளனர். கல்வி மேலும் மேம்பட்டு வருகிறது;
நிறைய திறமைசாலிகள் இருக்கின்றனர்.சேவை பொருளாதாரத்துக்கான திறன்களும், திறமையும் இந்தியர்களிடம் உள்ளன. நான்காவது தொழில் துறை புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறுகிறது.இந்தியாவில் உள்ள எங்கள் குழுவினர், மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வணிகத்தை மிகவும் திறம்பட நிர்வகித்து வருகின்றனர்.மேலும், உலக பொருளாதாரம் குறித்தும் நாங்கள் சிறப்பாக உணர்கிறோம். இப்போது, மெதுவான வளர்ச்சி சூழல் உள்ளது.
எங்களது ஆராய்ச்சி குழுவின் கணிப்புப்படி, வரும் ஆண்டில், உலக பொருளாதாரம், 3.2 சதவீதமாக அதிகரிக்கும். அமெரிக்காவின் பொருளாதாரம், 1.7 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source: dinamalar