புதுடில்லி : தொழில்நுட்ப நிறுவனமான, ‘ஆப்பிள்’ டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவில், ‘ஐபோன்’ விற்பனையில், இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.
இது குறித்து, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறியிருப்பதாவது: கடந்த மாதங்களில் இந்நாட்டில், ஆப்பிள் உற்பத்திக்கான முயற்சிகள் அதிகரித்துள்ளன.கடந்த ஆண்டு, உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதிக்காக, இந்தியாவில் ஐபோன் எக்ஸ்.ஆர்., தயாரிப்பு துவங்கப்பட்டது. ஆப்பிளின் பங்குதாரர் சால்காம்ப், சென்னையில் மூடப்பட்டிருக்கும், ‘நோக்கியா’ தொழிற்சாலையை பயன்படுத்த உள்ளது. இந்த ஆண்டு மார்ச் முதல், இந்த தொழிற்சாலை இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் காலாண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு, 6.52 லட்சம் கோடி ரூபாய் வருவாயை உலகளவில் எட்டியுள்ளது.இது, இதற்கு முந்தைய இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, 9 சதவீதம் அதிகமாகும். நிறுவனத்தின் நிகர லாபமும் இதுவரை இல்லாத வகையில், 1.56 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
Source: dinamalar