தங்க நகை என்றாலே அப்படி ஒரு அபார பற்று அது ஆணாகட்டும், பெண் ஆகட்டும். எங்களுக்கு தங்கம் வேண்டாம் என்று கூறும் மக்கள் இங்கு இருப்பது மிகக் கடினமே. அந்தளவுக்கு பிறந்த குழந்தை முதல் வயதான தாத்தா பாட்டி வரை விரும்பி அணியப்படும் ஒரு விலையுயர்ந்த மஞ்சள் உலோகமே தங்கம்.
இந்த தங்கத்தின் மீதான ஈடுபாடு மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் போகிறதே தவிர, குறைந்த பாடில்லை. ஆக எப்படியேனும் அவரவருக்கு ஏற்றாற்போல் ஒரு கிராமிருந்து கிலோ கணக்கில் தங்கம் வாங்குபவர்கள் இந்தியாவில் அதிகம் உண்டு.
இதனால் நாட்டில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் ஒரு பொருளாக தங்கம் உருவெடுத்தது. ஆனால் மறுபுறம் அதிகளவு தங்கம் இறக்குமதியால் நடப்பு கணக்கு பற்றாக்குறை நாட்டின் பெரும் பிரச்சனையாக மாறியது.
இந்த நிலையில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க மத்திய அரசு இறக்குமதி வரி என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தது. கடந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் இறக்குமதி வரியை 10% இருந்த நிலையில் அதை 12.5% ஆக உயர்த்தினார். அரசு எதிர்பார்த்ததை போலவே நாட்டில் தங்கம் இறக்குமதியும் 6.77% வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும் இந்தியா போன்ற மிகப்பெரிய அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாட்டில், கடந்த ஆண்டில் தங்கம் இறக்குமதி வீழ்ச்சி கண்டுள்ளது சாதனை தான்.
ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் தங்கம் இறக்குமதி குறைவினால் கடந்த ஆண்டில் தங்க ஆபரண ஏற்றுமதியும் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் இதனால் தங்க ஆபரண ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், வரவிருக்கும் பட்ஜெட்டில் தங்க நகை ஏற்றுமதியை அதிகரிக்க, தங்க இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாகவே தங்கம் இறக்குமதி வரியை 4% ஆக குறைக்க கோரிக்கை வைத்து வரப்படும் நிலையில், வரவிருக்கும் மாதங்களில் நகை ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு பட்ஜெட்டில் வரி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Goodreturns