சென்னை : நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம், 41.18 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 5,583 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே, வங்கியின் அதிகபட்ச நிகர லாபமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:வங்கியின் நிகர லாபம், 41.18 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 5,583 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே, வங்கியின் மிக அதிக நிகர லாபமாகும். வரிக்கு முந்தைய லாபம், 65.74 சதவீதம் அதிகரித்து, 10 ஆயிரத்து, 970 கோடி ரூபாயாக உள்ளது.நிகர வட்டி வருவாயும், 22.42 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. உள்நாட்டு நிகர வட்டி அளவு, 3.59 சதவீதமாக முன்னேறி உள்ளது.
செயல்பாட்டு லாபம், 44.34 சதவீதம் உயர்ந்து, 18 ஆயிரத்து, 223 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2018ல், 12 ஆயிரத்து, 625 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு கணக்கு வைப்பு தொகை, 9.27 சதவீதமும், சேமிப்பு கணக்கு வைப்பு தொகை, 8.19 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.நிகர வாராக் கடனின் அளவு, 130 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 2.65 சதவீதமாக உள்ளது. மொத்த வாராக் கடனின் அளவு, 177 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 6.94 சதவீதமாக உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Source: dinamalar