Press "Enter" to skip to content

சென்னையில் 2,650 பேர் உட்பட பிஎஸ்என்எல்லில் ஒரே நாளில் 78,000 ஊழியர்களுக்கு விஆர்எஸ்

புதுடெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வு திட்டத்தில் நேற்று ஒரே நாளில் 78,000 ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். சென்னை பிஎஸ்என்எல்லில் மட்டும் 2,650க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதே மிகப்பெரிய சுமையாக உள்ளது. இதனால் ஓய்வு வயதை நெருங்கியவர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிப்பதன் மூலம் சம்பள செலவு மிச்சப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக விருப்பு ஓய்வு திட்டத்தை அறிவித்தது. இதுபோல் எம்டிஎன்எல் நிறுவனத்துக்கும் விஆர்எஸ் அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 1.76 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். எம்டிஎன்எல் நிறுவனத்தில் 22,000 ஊழியர்கள் உள்ளனர். இதில் பிஎஸ்என்எல் நிறுவன வருவாயில் 60 சதவீதம், எம்டிஎன்எல் வருவாயில் 90 சதவீதம் சம்பளத்துக்கே போய்விடுகிறது என அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், விருப்ப ஓய்வு திட்டத்துக்கு விண்ணப்பிக்க கடந்த டிசம்பர் 3ம் தேதி வரை  அவகாசம் வழங்கப்பட்டது.

தகுதி உடையவர்களுக்கு, ஆண்டுக்கு 35 நாள் சம்பளம் என பணியாற்றிய மொத்த ஆண்டுகளுக்கு கணக்கிட்டு  கருணைத்தொகை வழங்கப்படும். இதுதவிர, ஓய்வு வயது வரை ஆண்டுக்கு 25 நாள் சம்பளம் வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். இதுபோல, எம்டிஎன்எல் நிறுவனமும் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி  அன்று 50 வயது பூர்த்தியடையும் ஊழியர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த இரண்டு நிறுவனங்களிலும் சேர்த்து 92,700 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த திட்டத்தில் சேர்ந்த 78,000க்கும் மேற்பட்டோர் நேற்று ஓய்வு பெற்றனர். இதுகுறித்து பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே.பர்வார் கூறுகையில், ‘‘விஆர்எஸ் திட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 78,300 ஊழியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த திட்டத்தில் 82,000 பேரை குறைக்க முடிவு செய்திருந்தோம். ஏறக்குறைய அந்த எண்ணிக்கை நெருங்கி விட்டது. இதுதவிர ஓய்வு வயது பெற்ற சுமார் 6,000 பேரும் ஓய்வு பெறுகின்றனர். இதன்படி மொத்தம் சுமார் 85,000 பேர் ஓய்வு பெறுகின்றனர்’’ என்றார்.

எம்டிஎன்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கநர் சுனில் குமார் கூறுகையில், ‘‘விஆர்எஸ் திட்டம் மூலம் 13,650 பேரை குறைக்க முடிவு செய்திருந்தோம். ஆனால், 14,378 பேர் இத்திட்டத்தில் விண்ணப்பித்து ஓய்வு பெறுகின்றனர். இதனால் ஆண்டு சம்பள சுமை 2,272 கோடியில் இருந்து 500 கோடியாக குறையும். தற்போது எம்டிஎன்எல்லில் 4,430 ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள். நிறுவனத்தை நடத்த இந்த எண்ணிக்கை போதுமானது என்றார்.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »