டெல்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் 2020, இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார்.
அதிலும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதள பாதாளத்தில் உள்ள பொருளாதாரத்தினை மீட்கும் பொறுப்பில் மத்திய அரசு உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் என்னவெல்லாம் சொல்லப்போகிறார் நிர்மலா சீதாராமன்.
இத்துணை பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியிலும் அனைவரின் பார்வையும் அந்த சிவப்பு நிற பெட்டகத்தின் மீது விழுந்திருக்கிறது. வரவிருக்கும் நிதியாண்டில் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்க போகும் அந்த அறிக்கைகள் என்னென்ன?
இந்த நிலையில் பல துறையிலும் இருந்தும் பல தரப்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளோம். ஆக அனைவருக்குமான பட்ஜெட்டாக இருக்கும். பொருளாதாரத்தினை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் அரசு மேற்கொண்டுள்ளது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அதிலும் பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கும் வேலையின்மை, அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை, உற்பத்தி துறை வீழ்ச்சி, வரி வருவாய் வீழ்ச்சி என மத்திய அரசினை ஆட்டிப்படைத்து வருகிறது.
கடந்த ஆண்டு வீழ்ச்சி கண்டு வரும் உற்பத்தி துறையினை ஊக்குவிக்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும் கார்ப்பரேட் வரி விகிதத்தினை குறைத்தது மத்திய அரசு. ஆனால் மத்திய அரசு எதிர்பார்த்ததை போல அந்தளவுக்கு பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் வரவில்லை என்றே கூறலாம். இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் வரி குறைப்பு இருக்குமா என்றும் தொழில் துறையினர் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது நிறைவேறுமா? வேலைவாய்ப்பினை பெருக்க ஏதேனும் நடவடிக்கை இருக்குமா? அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது போல தனி நபர் வருமான வரி என்பது குறைக்கப்படுமா? இன்னும் சில மணி நேரங்களில் தெரிய வரும்.
அதிலும் நாட்டில் அனைவரின் கையிலும் பணப்புழக்கத்தினை அதிகரிக்கும் வங்கித்துறையில் ஏதேனும் சலுகை நடவடிக்கைகள் இருக்குமா. வாருங்கள் பட்ஜெட்டில் என்ன தான் நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.
Source: Goodreturns