டெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வு திட்டத்தில் ஜனவரி 31ல் மட்டும், ஒரே நாளில் 78,000 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், மீட்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக தன்னார்வ விருப்ப ஓய்வூதிய திட்டத்தினை அறிவித்தது.
இதன் படி ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதே மிகப்பெரிய சுமையாக இருந்த நிலையில், ஓய்வு வயதை நெருங்கியவர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிப்பதன் மூலம் சம்பள செலவு மிச்சப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
பட்ஜெட்-க்கு முன்னாடியே இப்படியா..? பட்ஜெட்-க்குப் பின் என்ன ஆகுமோ..?
மொத்த ஊழியர்கள்
இதற்காகத் தான் பிஎஸ்என்எல்லை மறுசீரமைக்கும் பொருட்டு விருப்பு ஓய்வு திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. இது போலவே எம்டிஎன்எல் நிறுவனத்துக்கும் விஆர்எஸ் அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மொத்தம் சுமார் 1.76 லட்சம் ஊழியர்கள் இருந்த நிலையில், எம்டிஎன்எல் நிறுவனத்தில் 22,000 ஊழியர்கள் இருந்தனர்.
வருமானத்தில் பாதிக்கும் மேல் சம்பளம்
பிஎஸ்என்எல் நிறுவன வருவாயில் பாதிக்கும் மேல் சம்பளத்திற்கே போய்விடும். இதே போல எம்டிஎன்எல் நிறுவனத்தின் வருவாயில்முக்கால்வாசிக்கும் மேல் சம்பளத்துக்கே போய் விடுவதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் தான் தன்னார்வா விருப்ப ஓய்வு திட்டத்துக்கு விண்ணப்பிக்க கடந்த டிசம்பர் 3ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 31 அன்று இவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது.
விருப்ப ஓய்வூதாரர்களுக்கு என்ன சலுகை
இந்த விருப்ப ஓய்வு திட்டத்தில் தகுதி உடையவர்களுக்கு, ஆண்டுக்கு 35 நாள் சம்பளம் என பணியாற்றிய மொத்த ஆண்டுகளுக்கு கணக்கிட்டு கருணைத்தொகையாக வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதுதவிர ஓய்வு வயது வரை ஆண்டுக்கு 25 நாள் சம்பளம் வீதம் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
விருப்ப ஓய்வு
இதே போல் எம்டிஎன்எல் நிறுவனமும் விஆர்எஸ் திட்டத்திலும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 31ம் தேதி அன்று 50 வயது பூர்த்தியடையும் ஊழியர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வெள்ளிக்கிழமையோடு, இந்த இரண்டு நிறுவனங்களிலும் சேர்த்து 92,700 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த திட்டத்தில் சேர்ந்த 78,000க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர்.
மொத்தம் எத்தனை பேர்?
இது குறித்து பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே.பர்வார் கூறுகையில், விஆர்எஸ் திட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 78,300 ஊழியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த திட்டத்தில் 82,000 பேரை குறைக்க முடிவு செய்திருந்தோம். ஏறக்குறைய அந்த எண்ணிக்கை நெருங்கி விட்டோம். இதுதவிர ஓய்வு வயது பெற்ற சுமார் 6,000 பேரும் ஓய்வு பெறுகின்றனர். ஆக மொத்தம் சுமார் 85,000 பேர் ஓய்வு பெறுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இவர்கள் போதும்
மேலும் எம்டிஎன்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கநர் சுனில் குமார் இது குறித்து கூறுகையில், விஆர்எஸ் திட்டம் மூலம் 13,650 பேரை குறைக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட 14,378 பேர் இத்திட்டத்தில் விண்ணப்பித்து ஓய்வு பெறுகின்றனர். இதனால் ஆண்டு சம்பள சுமை 2,272 கோடியில் இருந்து 500 கோடியாக குறையும். ஆக தற்போது எம்டிஎன்எல்லில் 4,430 ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள். இந்த நிறுவனத்தை நடத்த இந்த எண்ணிக்கை போதுமானது என்றும் தெரிவித்துள்ளார்.
Source: Goodreturns