கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ 216 ரன்னில் சுருண்டது.
இந்தியா ‘ஏ’ – நியூசிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து ‘ஏ’ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி திணறியது. குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஈஸ்வரன் (8), மயங்க் அகர்வால் (00, பன்சால் (18) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 153 ரன்னாக இருக்கும்போது ஹனுமா விஹாரி 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 83 பந்தில் 83 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அப்போது இந்தியா ‘ஏ’ ஐந்து விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் 33 ரன்னுக்குள் மீதமுள்ள ஐந்து விக்கெட்டுக்களையும் இழந்த இந்தியா ‘ஏ’ முதல் இன்னிங்சில் 216 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து ‘ஏ’ முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar