இளையோர் உலக கோப்பை காலிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான், அரையிறுதியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 4-வது காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான பர்ஹான் ஜாகில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் 49.1 ஓவரில் 189 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மொகமது ஹரைரா ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் 41.1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தானோடு இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான், நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது. 6-ந்தேதி நடக்கம் 2-வது அரையிறுதியில் வங்காளதேசம் – நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
Related Tags :
Source: Maalaimalar