ஷார்ஜாவில் 2018-ல் நடைபெற்ற டி10 லீக்கில் விளையாடியதால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை 48 வயதான பிரவீன் தாம்பே இழந்து விட்டதாக ஐபிஎல் சேர்மன் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே. இவர் கடைசியாக 2017-ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடினார். அதன்பின் இரண்டு சீசனில் விளையாடவில்லை.
ஐபிஎல் 2020 சீசனுக்கான ஏலத்தில் இடம் பிடித்திருந்த இவரை அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா ஏலம் எடுத்தது.
இவர் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக மும்பை கிரிக்கெட் சங்கத்தில் ஓய்வு பெறுகிறேன் என்று தெரிவித்தார். மும்பை டி20 லீக்கில் விளையாடிய பின்னர் ஓய்வு முடிவை திரும்ப பெற்றார்.
இதற்கிடையில் ஷார்ஜாவில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற டி10 லீக்கில் விளையாடினார். பிசிசிஐ விதிப்படி ஒரு வீரர் ஓய்வு பெற்றால் மட்டுமே வெளிநாட்டில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் விளையாட முடியும்.
ஷார்ஜா T10 லீக்கில் விளையாடியதால் ஐபிஎல்லில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘பிரவீன் தாம்பேவை ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்க முடியாது’’ என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் சேர்மேன் பிரிஜேஷ் பட்டேல் தகவல் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ ஒருநாள், மூன்று நாள், நான்கு நாள் கிரிக்கெட் மற்றும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட மட்டுமே அனுமதிக்கும். இந்த வகையான கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐ-யிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
ஆனால் டி20 மற்றும் டி10 என்பது மாறுபட்டது என்றார்.
Related Tags :
Source: Maalaimalar